Cinema

விஷால் முதல் யாஷ் வரை : அடுத்த 3 மாதங்களுக்கு ரிலீஸுக்கு வரிசைக்கட்டும் தமிழ் படங்கள் என்னென்ன?

இரண்டாவது கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல மீண்டு எழுந்து வந்துக் கொண்டிருந்ததால் சினிமாத் துறையும் அதற்கேற்றவாறு படங்களை வெளியிட ஆயத்தமானது.

ஆனால் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என பழைய நிலைக்கே இட்டுச் சென்றது. அவ்வகையில் திரையரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கே அனுமதி என அரசு அறிவித்ததால் பெரிய பட்ஜெட் கொண்ட படங்கள் பலவும் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தணிந்திருப்பதால் தற்போது ரிலீஸுக்காக படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அதன்படி தமிழில் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கும் படங்களின் விவரங்களை காண்போம்.

பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு ஜனவரி 26ம் தேதிக்கு மாற்றப்பட்ட விஷாலின் வீரமே வாகை சூடும் வெளியீடு தற்போது பிப்ரவரி 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

விஜய் சேதுபதியில் கடைசி விவசாயி, விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர். படங்கள் பிப்ரவரி 11ம் தேதியன்றும், சிவகார்த்திகேயனின் டான் மார்ச் 25ம் தேதியும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே மார்ச் 25ம் தேதியன்றுதான் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படமும் வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இருப்பினும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் அஜித்தின் வலிமை படம் எப்போது ரிலீஸாகும் என்ற எந்தவொரு அறிவிப்பும் படக்குழு தரப்பில் இருந்து இதுகாறும் வெளியாகவில்லை. ஆனால் பிப்ரவரி 24ம் தேதி வலிமை படம் வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 11 அல்லது 18ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விஜய்யின் பீஸ்ட் படமும் யாஷின் கே.ஜி.எஃப்-ம் ஏப்ரல் 14ம் தேதி ஒரே சமயத்தில் ரிலீஸாக இருக்கிறது.

இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இருப்பினும் அரசு தரப்பில் தளர்வுகள் குறித்த எந்த மாற்றங்கள் தெரிவிக்காததால் அடுத்த என்ன அறிவிப்பு வருமோ என்ற அச்சத்தையே கூடவே ஏற்படுத்தி வருவதாக கலைத்துறையினர் கூறுகின்றனர்.

Also Read: 2021ல் திடீர் மறைவால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழ் திரைப்பிரபலங்கள்!