Cinema

“நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்” : அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் என அறிவிப்பு!

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவர் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றவர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர்.

இவர் நடித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்துள்ளன. இவர் இறுதியாக நடித்த 'யுவரத்னா' படம் பெரும் வரவேற்றைப் பெற்ற நிலையில், 'ஜேம்ஸ்', 'த்வித்வா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் புனித் ராஜ்குமார்.

இந்நிலையில் இன்று காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன் அங்கு குவிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Also Read: தோனியின் நம்பிக்கை.. பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு.. வெற்றியை தேடித்தருவாரா ஹர்திக் பாண்ட்யா?