Cinema

”10 ஆண்டுகளுக்கு பிறகு பொய் வழக்கிலிருந்து விடுபட்டிருக்கிறேன்; நன்றி” - இயக்குநர் பாலா உருக்கம்!

2011 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானம் குறித்து அவதூறாக சித்தரித்து கருத்துக்கள் வெளியானதாக கூறி சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கராத்மஜன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெளியானது.

இயக்குநர் பாலா தரப்பில் வழக்கறிஞர் முகமது உசேன் ஆஜராகி திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் மனதார குற்றம் முறையாக நிரூபணம் செய்யப்படாததால் இயக்குநர் பாலாவை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்ற ஆவணங்களை பெற்று கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பேசிய இயக்குநர் பாலா, என் மீது போடப்பட்ட பொய்யான அவதூறு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: ”நீதிடா.. நேர்மைடா..” : லைகா நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ஐகோர்ட் - குஷியில் நடிகர் விஷால் ட்வீட்!