Cinema

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் தனுஷ், அனிருத்... தனுஷுக்கு ஜோடியாகும் 3 நாயகிகள்! #CineUpdates

சரத்குமார் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸின் டைட்டில் வெளியானது!

தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் சரத்குமாருக்கு கடைசியாக வெளியான ‘வானம் கொட்டட்டும்’ படம் நல்ல வரவேற்பை பெற்று தந்திருந்தது. அதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார்.

இந்த படத்திற்கிடையே தற்போது இளம் நட்சத்திரங்கள் அதிகமாக கவனம் செலுத்தும் வெப் சீரிஸில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா தயாரிப்பில் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராகிவரும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த சீரிஸை கமலின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கிவருகிறார். இந்த சீரிஸ்க்கு ‘இரை’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் படம்!

ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ படத்தின் வேலைகளை முடித்து இந்தியா வந்த தனுஷ் தனது 43வது படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கிவரும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகளில் ஐதராபாத்தில் பிஸியாக இருந்து வருகிறார் தனுஷ்.

இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தனது 44வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரியா பவாணி ஷங்கர், நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி அமைக்கவுள்ளனர். இந்த அறிவிப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஜூலை 12ல் துவங்கும் லிங்குசாமியின் தெலுங்கு படம்!

‘சண்டக்கோழி 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை துவங்க இருந்த சமயத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்களின் ஷூட்டிங் வேலைகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன, அந்த வரிசையில் லிங்குசாமி படமும் இணையவுள்ளது. இதில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரீத்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்திற்கான ஷூட்டிங் வரும் 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read: ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்; மீண்டும் தொடங்கியது புஷ்பா ஷூட்டிங்! - சினி துளிகள்