Cinema

படம் ட்ராப்... இசையமைப்பாளருக்கு கொலை மிரட்டல் : திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார்!

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயன்பாலா. சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரவி தேஜா வர்மா, மனோ சித்ரா நடிப்பில் உருவான 'மாயமுகி' படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.

பிறகு இசையமைப்பாளர் ஜெயன்பாலாவுக்கு சம்பளம் ரூபாய் ஒரு லட்சம் பேசப்பட்டு, இதற்கான அட்வான்ஸ் தொகையையும் படத்தின் தயாரிப்பாளரான டில்லிபாபு வழங்கியுள்ளார். இதனால் இந்தப் படத்திற்கான இசைப்பணிகளை ஜெயன்பாலா பாதி முடித்துள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் திடீரென மாயமுகி படம் பாதியிலேயே கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து மாயமுகி படத்தை கைவிடுவதாகத் தெரிவித்து படத்திற்கு இசையமைத்த ஹார்டிஸ்க்கை தருமாறு தயாரிப்பாளர் டில்லிபாபு ஜெயன்பாலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு மீதி தொகையை வழங்கினால் தருவதாக ஜெயன்பாலா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த டில்லிபாபு ஜெயன்பாலாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஜெயன்பாலா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் டில்லிபாபு உள்ளிட்ட 7 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இறுதிகட்டத்தில் நானியின் பிரமாண்ட படம்.. ஒன்றிய அரசுக்கு எதிராகப் பொங்கியெழுந்த பிரபலங்கள்! #CineUpdates