Cinema

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ‘மாநாடு’ : மாலத்தீவில் கொண்டாட்டத்துடன் ஷூட்டிங்கை முடிக்கும் சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோரின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் `மாநாடு'. பல தடைகளுக்குப் பிறகு இதனுடைய படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் முக்கியமான மாநாடு காட்சிகள் இருந்ததால், அதை எல்லாம் முதலில் எடுத்திடத் திட்டமிட்டு, அந்தக் காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்து முடித்துவிட்டார் வெங்கட் பிரபு. படத்துக்காக வெளியிடப்பட்ட டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட சமீபத்தில், "நான் பார்த்தவரைக்கும் `மாநாடு' படம் சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என ட்வீட் செய்திருந்தார்.

இப்படி தொடர்ந்து படம் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இப்போது படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.`மாநாடு' படத்தின் கடைசி ஷெட்யூல்க்காக மாலத்தீவிற்கு பயணிக்க இருக்கிறது படக்குழு.

அங்கே எடுக்க இருக்கும் ஏர்போர்ட் காட்சிகளை முடித்தவுடன் ஷூட்டிங் நிறைவடைந்துவிடும். படத்தை முடித்ததும் அங்கேயே சின்ன கொண்டாட்டத்துக்கும் திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. இன்னும் மூன்று மாதத்தில் படத்தின் ரிலீஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Also Read: விஜய்யின் அடுத்த படத்திலும் யோகிபாபு? - உறுதியானது 4வது முறையாக கூட்டணி!