Cinema

“யாரோ சொல்றாங்கனு நான் ஏன் பதில் சொல்லனும்?” - அஜித், சிகிச்சை கட்டண வதந்திகளுக்கு சரண் காட்டமான பதில்!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக வதந்திகள் பரப்பபட்டு வருவது தொடர்பாக அவரது மகன் சரண் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது எஸ்.பி.பி சரண் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியதன் விவரம்:

“எங்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறியதில் உண்மை இல்லை. இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சையின் ஒரு பாதி செலவை பூர்த்தி செய்து விட்டோம். கட்டண தொகையை செலுத்த நாங்கள் அரசை நாடியது உண்மைதான். எனது தந்தை இறந்தபிறகு மீதமுள்ள கட்டணத் தொகையை செலுத்த நாங்கள் வந்தபோது மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டாம். அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம் எனக் கூறினார்கள். அதற்காக மருத்துமனைக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

எங்கள் தந்தைக்கு பிரமாண்ட நினைவு இல்லம் கட்டத் திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோர் அவரை நல்லடக்கம் செய்துள்ள பகுதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான நேரம் போன்றவை குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கிறேன்.

சுகாதாரத்துறையிடம் கட்டண உதவி தொடர்பாக பேசி இருந்தேன். சுகாதார துறை செயலர் அதுதொடர்பாக வழி உள்ளதா என்பதை பார்த்துவிட்டு கூறுவதாகக் கூறினார். தந்தை உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு அரசு உயர் அதிகாரிகளின் அனுமதியோடுதான் வைத்திருந்தோம். பக்கத்து வீட்டின் மதில் சுவர் மீது ஏறி சிலர் சேதப்படுத்தியதால்தான் தந்தையின் உடலை விரைந்து தாமரைப்பாக்கம் கொண்டு சென்றோம்.

Also Read: “இத நாம அனுபவிச்சுதான் ஆகனும்” - உலகுக்கு எஸ்.பி.பி. சொன்ன கடைசி மெசேஜ்!

நடிகர் அஜித் எனது தந்தையின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். அவர் எனது நண்பரும் கூட. அவரவர்கள் அவரவர் இடத்திலிருந்து அப்பாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஜித் அவருடைய இடத்திலிருந்து மரியாதை செலுத்தி இருப்பார். தற்போது அது பிரச்னை அல்ல. அப்பாவின் சிகிச்சை தொடர்பாகவும், சிகிச்சைக் கட்டணம் தொடர்பாகவும், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக பரவும் எந்த வதந்திகளையும், பொய் செய்திகளையும் மக்கள் நம்பவேண்டாம். மருத்துவமனையில் எவ்வளவு தொகை செலுத்தினோம் என்பது எனது குடும்பத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உள்ளது. அதைப் பற்றி தெரிவிக்கவேண்டிய அவசியம் தற்போது கிடையாது. தந்தையை இழந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை.

அதற்கான இடைவெளியை கொஞ்சம் கொடுங்கள். அப்பா, கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். ஆனால், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.

Also Read: “எஸ்.பி.பி நம் கலாசாரத்தின் ஒரு பகுதி.. அவரை நாம் கொண்டாட வேண்டும்” - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்! (Video)