Cinema

“எனக்கும் நயன்தாராவுக்கும் 22 முறை திருமணம் நடந்துள்ளது!” : விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் இடையேயான காதல் அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் 5 வருடங்களுக்கும் மேலாகப் பழகி வருகின்றனர். அதை பொதுவில் தெரிவிக்கும் வகையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவுடனான புகைப்படங்களைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இருவரின் திருமணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் பல நாட்களாக வெளிவந்துகொண்டே இருந்தாலும், இருவரும் திருமணம் குறித்து இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் தங்கள் திருமண திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒன்றாக நேரத்தைக் கழித்துள்ளனர். இதுகுறித்து அப்பேட்டியில் பேசியுள்ள விக்னேஷ் சிவன் அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே உள்ள உறவு நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் திருமணத்தைப் பற்றி எண்ணுவதற்கு முன்பாக சாதிக்கவேண்டிய லட்சியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலையில் இருவருக்கும் சில லட்சியங்கள் உள்ளதால் அவற்றை அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்வது பற்றிச் சிந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கும் நயன்தாராவுக்கும் 22 முறை ஊடகத்தினரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கேலியாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் காதல் எப்போது சோர்வைத் தருகிறதோ அப்போது திருமணம் குறித்துச் சிந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் ’காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் மற்றும் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.

Also Read: ‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவின் நாய்க்குட்டிகளுக்கு 18 லட்சம் லைக்ஸ் - இணையத்தில் வைரல்!