Cinema

“சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி பரிவர்த்தனை” - விசாரணையில் புதிய திருப்பம்!

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையில் அமலாக்கதுறையினர் ‘பணச்சலவை’ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சந்தேகிகத்திற்கு இடமான வகையில் 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை மையமாக வைத்து இந்த வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. பீகார் காவல்துறை சுஷாந்த் சிங் வங்கிகணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டதை விசாரித்து வருகிறது.

சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அமலாக்கத்துறை அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் பாட்னாவிலிருந்து மும்பை வந்து முகாமிட்டுள்ள பீகார் காவல்துறை சுஷாந்த் சிங் ராஜ்புட் அவருடைய தோழி ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரருடன் இணைந்து தொடங்கிய இரண்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணை சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடந்துவருகிறது. தன்னுடைய மகனை ரியா சக்கரபோர்த்தி மன ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் அவருடைய வங்கி கணக்கிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை செய்ததாகவும் புகார் அவர் அளித்துள்ளார்.

பீகார் காவல்துறையினர் மும்பையில் விசாரணை நடத்துவது மும்பை காவல்துறைக்குமிடையே உரசல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சட்ட நிபுணர்கள் பலரும் பீகார் காவல்துறை மும்பையில் விசாரணை நடத்துவதற்கான அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

மும்பை காவல்துறையும் ஒரு பக்கம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் மும்பை காவல்துறையின் தரப்பில் எந்த முதல் தகவல் அறிக்கையும் இது வரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுஷாந்த் மரணம் எதிரொலி: கரண் ஜோஹர், சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு - பாலிவுட்டில் சலசலப்பு!