Cinema

“நான் சேர்த்து வைத்த செல்வம் நீங்கள்தான்” - இறந்த பிறகும் இர்ஃபானிடம் இருந்து வந்த கடைசி மெசேஜ்.. !

பாலிவுட் நடிகராக இருந்து உலக புகழ்பெற்ற கலைஞராக மாறிய இர்ஃபான் கான் அரியவகை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆற்றியுள்ளது.

திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இர்ஃபானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர், வெறும் நடிகராக மட்டும் இருந்துவிட்டு செல்லவில்லை.

ஒரு நல்ல சமூக ஆர்வலராகவும் இருந்ததாலும், எல்லோர் தரப்பினரிடையேயும் அன்பு பாராட்டியதால் அவரது பிரிவு மிகப்பெரிய வெறுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

படங்களிலும், ஒரு கதாபாத்திரமாக நடிக்காமல் அதனுள்ளே ஊடுருவி வாழ்ந்து காட்டியவர் என்பதால், சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவரது தத்துவார்த்தமான வசனங்களை கோடிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில், மரண படுக்கையில் இருக்கும் வேளையிலும் இர்ஃபான் தனது ரசிகர்களுக்காக எழுதிய கடிதமும், இணையத்தில் வலம் வர, மேலும் அது கவலையில் ஆழ்த்தியது. அதுபோலவே, தனது ஃபேஸ்புக் பக்கத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பும் ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு மெசேஜை அனுப்பும் வகையில் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதில், “ உங்களுக்குத் தெரியாத வழிகளில் என் வாழ்க்கையைத் தொட்டதற்கு நன்றி .. உங்களைப் போன்ற ரசிகர்களை தவிர உண்மையிலேயே நான் சேர்த்து வைத்த செல்வங்கள் என ஏதும் இல்லை..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான Screen Shot தற்போது சமூக வலைதளத்தில் பரவியதோடு, ரசிகர்கள் மீதான இர்ஃபானின் அன்பு குறித்து பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read: “இறங்கவேண்டிய இலக்கு வந்துவிட்டது...” - இர்ஃபான் கானின் கடைசி கடிதம்! #RIPIrfanKhan