Cinema

“ஒரே நாடு ஒரே மதம்” மோடிக்கும் பா.ஜ.கவுக்கும் அறிவுரை வழங்கிய ‘ஆஸ்கர்’ நாயகனின் பேச்சு!

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 92வது ஆஸ்கர் விருது விழாவில், 1917, பாரசைட், ஜோக்கர் உள்ளிட்ட பல்வேறு படங்களும், அதில் நடித்த, பணியாற்றியவர்களும் முக்கிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அலங்கரித்துச் சென்றனர்.

இதில், ரசிகர்களின் நாயகனான வாக்கின் ஃபீனிக்ஸ் (JOAQUIN PHOENIX) ஜோக்கர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை பெற்றிருக்கிறார். இதனையடுத்து, அவரை பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் சமூக வலைதளங்களை நிரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

விருது பெற்ற பிறகு அவர் பேசிய பேச்சை யார் கேட்கிறார்களோ இல்லையோ மோடி, பா.ஜ.க, மதம், சாதி என சமூகத்தில் பிரிவினைய ஏற்படுத்தி ஆதாயம் அடையத் துடிப்பவர்கள் நிச்சயம் கேட்க வேண்டும். ஆஸ்கர் விழா மேடையில் பேசிய வாக்கின் ஃபீனிக்ஸ், ” சினிமா மூலம் குரலற்றவர்களின் குரலாக இருக்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி. சமூகத்தில் கவலை தரும் பல விஷயங்கள் நீடிப்பது பற்றி நான் மிகவும் யோசித்திருக்கிறேன்.

சமயங்களில் நாம் வெவ்வேறு காரணங்களுக்காக வெற்றியை காண்கிறோம் என நாம் நம்புகிறோம் அல்லது நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால் என்னை பொறுத்தவரை அது பொதுவான தன்மையுடையதுதான். பாலின சமத்துவமின்மை, நிறவெறி, விலங்குகளுக்கான உரிமைகள், உள்நாட்டு உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அந்த உரிமைகள் கிடைப்பதற்காக போராடி வருகிறோம்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மக்கள், ஒரே இனம், ஒரே பாலினம் ஆகியவையே உலகை ஆள வேண்டும், மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு எதிராக போராடுகிறோம். ஆனால் நாம் ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது நாம் பிரிந்திருக்கிறோம். நம்மால் சுயநலமாக இயற்கை சூறையாடப்பட்டு வருகிறது. அதற்கான அதிகாரம் நமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நம்மை மாற்றிக்கொள்ள அச்சப்படுகிறோம். அதனால், எதையோ நாம் இழந்துவிடுவது போல நினைக்கிறோம்.

அன்பு மற்றும் இரக்க குணத்தை அடிப்படையாகக் கொண்டு நமது அணுகுமுறை இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்த உலகத்தை அனைத்து உயிர்களுக்கானதாக மாற்றும் வழிமுறைகளை நாம் கண்டு உருவாக்கி முன்னேற்ற முடியும். அதுவே ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் வழி.

நான் மிகவும் மோசமானவனாக இருந்திருக்கிறேன். சுயநலக்காரனாக இருந்திருக்கிறேன். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார்கள்.

அதனால்தான் இங்கே நிற்கிறேன். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதுதான் சரியான வழி. நாம் ஒருவரை ஒருவர் அரவணைக்க வேண்டும். வளர்ச்சியடைய, அறிவு பெற, ஒருவரை ஒருவர் மீட்க உதவுவதுதான் மனிதத்தன்மை. அதுதான் சிறந்த நெறி.

என்னுடைய சகோதரன் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘மனம் நிறைய அன்புடன் மீட்பதற்கு புறப்படு, அமைதி தானாக பின் தொடரும்.’ என்று தனது உரையை முடித்து உலகையை நெகிழச் செய்துள்ளார்.

சக மனிதனை, அன்பாக பாருங்கள். அவனை துயரத்தில் இருந்து மீட்டெடுங்கள். சுயநலமில்லா, அனைத்து உயிர்களுக்குமான சமுதாயத்தை உருவாக்குங்கள் என்பதை தான் ஜோக்கர் திரைப்படம் பேசியிருக்கிறது. அந்த படம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்கும் அதுவே காரணம்.