Cinema

நாளை வெளியாக இருந்த ‘நாடோடிகள் 2’ படத்திற்கு இடைக்காலத் தடை : ஐகோர்ட் உத்தரவு!

சசிகுமார், அபிநயா ஆகியோர் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நந்தகுமார் தயாரிக்க இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.

இப்படத்தில், நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ‘நாடோடிகள்’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், படத் தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கை எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்தாகவும், ஒப்பந்தப்படி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்கவேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்கு தர "கியூப்" நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதிலளிக்க படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Also Read: 'விஜய் 65' இயக்குநர் இவர்தானா? - சூர்யா படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்கும் பெண் இயக்குநர்!