Cinema

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கிறாரா ? : திருவான்மியூர் வீட்டில் வனத்துறையினர் சோதனை !

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் மலைப்பாம்பு வளர்ப்பதாக வந்த புகாரை அடுத்து வேளச்சேரி வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அஜித்தின் உதவியாளரும், மேலாளருமான சுரேஷ் சந்திரா திருவான்மியூரில் உள்ள அஜித் வீட்டில் 3 அடி நீளத்திற்கு மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாகவும், அதற்கு தினந்தோறும் எலிகளை உணவாக அளித்து வருவதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புகாரை அடுத்து அஜித்தின் திருவான்மியூர் வீட்டிலும், மதுரவாயலில் உள்ள சுரேஷ் சந்திராவின் வீட்டிலும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது மலைப்பாம்பு ஏதும் சிக்கவில்லை என்பதால் சுரேஷ் சந்திராவிடமும், அவரது உதவியாளர் நாசரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மலைப்பாம்பு வளர்ப்பது கண்டுபிடிக்கும் பட்சத்தில் சுரேஷ் சந்திரா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருவான்மியூரில் உள்ள வீட்டில் பாரமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூருக்கு, அஜித் இடம்பெயர்ந்துவிட்டதால் திருவான்மியூரில் சுரேஷ் சந்திரா வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அஜித் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.