Cinema

“என் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” - எஸ்.ஏ.சி விளக்கம்!

பிரபல நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தான் தயாரித்த ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வழங்குவதாகக் கூறி 21 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு கனடா தொழிலதிபரான பிரமானந்தம் சுப்பிரமணியம் என்பவரை மோசடி செய்ததாகக்கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புகாரை எதிர்த்து தனது தரப்பு விளக்கத்தினை அளிக்க எஸ்.ஏ சந்திரசேகர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனடாவிலுள்ள பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கு தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட டிராபிக் ராமசாமி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை 50 லட்சம் ரூபாய்க்கு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அவரால் 20 லட்சத்து 62 ஆயிரம் மட்டுமே செலுத்த முடிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மீதமுள்ள பணத்தை அவர் செலுத்தாததால் தங்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய அவர், வேறொருவருக்கு படத்தை விற்றால் மட்டுமே அவரது பணம் திரும்ப அளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டிராபிக் ராமசாமி படத்தினை யாரும் வாங்க முன்வராததாலும், அந்தப் படத்தை தானே வெளியிட்டதாலுமே பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கு அவரது பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை எனவும் இதில் மோசடி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

தனது குடும்பத்தின் வளர்ச்சி மீது பொறாமைப்படும் யாரோதான் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் தனது 41 ஆண்டுகால உழைப்பை கெடுக்க யாராலும் முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.