Cinema

பிரமாண்ட இயக்குநரின் உதவியை நாடும் மணிரத்னம்... எதற்கு தெரியுமா?

செக்கச் சிவந்த வானம் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த பிரமாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

நெடுங்கதையான ‘பொன்னியின் செல்வன்’ புத்தகக் கதையை 3 மணிநேரத்தில் அவ்வளவு சுலபமாக கடத்திவிட முடியாது. எனவே, இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குநர் மணிரத்னம் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், சத்யராஜ், ஜெயம் ரவி, கார்த்தி, நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஜெயராம் என பலர் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க இருக்கிறார் மணிரத்னம். தினமும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து படமாக்க வேண்டிய அவசியம் உள்ளதால் பொன்னியின் செல்வன் படத்துக்கான பணிகள் துல்லியமாக இருக்கவேண்டும் என மணிரத்னம் திட்டமிட்டு வருகிறார்.

இந்த நிலையில், போர் மற்றும் அரசவைக் காட்சிகளை ஏற்கெனவே பிரமாண்டமாக எடுத்து வெற்றியைக் கொடுத்துள்ள பாகுபலி படங்களின் இயக்குநர் ராஜமவுலியை சந்தித்து ஆலோசனை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே ராஜமவுலியிடம் மணிரத்னத்தின் இயக்குநர் குழு ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், விரைவில் மணிரத்னம் ராஜமவுலியை நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலிருந்து, பொன்னியின் செல்வன் படத்தில் ராஜமவுலியின் பங்கும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய வரலாற்றுக் கதையை ‘ஆர்.ஆர்.ஆர்’ என பிரமாண்ட படமாக இயக்கும் பணியில் ராஜமவுலி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.