Cinema

“நடிகை அமலா பால் மீதான வழக்கு செல்லாது” : நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலிசார் தகவல்!

நடிகை அமலா பால் கடந்த 2017ம் ஆண்டு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள மெர்சிடஸ் கார் ஒன்றை பெங்களூருவில் வாங்கினார். அந்த காருக்கு ரூ. 20 லட்சம் வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால், வரியைக் குறைவாகச் செலுத்துவதற்காக, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காரை பதிவு செய்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவுசெய்ய முடியும் என விதி உள்ளது. அதனால், அமலாபாலின் மெர்சிடஸ் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலிஸார் விசாரித்து வந்தனர். இந்த சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம் அமலா பாலுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த காரை விற்றுவிட்டதாகத் தெரிவித்தார் அமலா பால்.

இதேபோல, மலையாள நடிகரும் இயக்குநருமான ஃபகத் ஃபாசிலும் புதுச்சேரியில் போலியான முகவரியைப் பயன்படுத்தி காரை பதிவு செய்து சிக்கினார். ஃபகத் ஃபாசில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

அமலா பால், தனக்கு புதுச்சேரி அரசின் விதிமுறை பற்றித் தெரியாது எனக் கூறிவந்தார். அமலா பால் கார் வாங்கியதும், பதிவு செய்ததும் கேரளாவுக்கு வெளியே என்பதால் அம்மாநில காவல்துறை வழக்கை பதிவு செய்ய மறுத்தது. இந்நிலையில், குற்றப்பிரிவு போலிஸார், அமலா பால் மீது வழக்கு பதிவு செய்யமுடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.