இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு இருக்கும் போர் நாளுக்கு நாள் வலுவடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. உணவுக்கே திண்டாடும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
இந்த போரை நிறுத்த உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாடு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கடந்துதான் அரபிக் கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன. இந்த நீரினை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் உலகின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.