உலகில் வறுமை, போர், இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளின் மக்கள் வேறு நாடுகளுக்கு உயிர்பிழைக்க அகதிகளாக செல்கின்றனர். அதிலும் சமீப காலமாக இந்த அகதிகள் இடமாற்றம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் அகதிகள் வளர்ந்த நாடுகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளை நோக்கியே தஞ்சம் தேடி செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளும் அகதிகள் பிரச்சனை காரணமாக கடுமையாக பாதிக்கப்படுறது.
இதில் பல்வேறு நாடுகள் அகதிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை அனுமதிக்காமல் இருந்து வருகிறது. இதனால் அங்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கனடாவுக்கு சட்டவிரோதபாக பலர் சென்று வருகின்றனர். ஆனால் அதில் சிலர் அங்குள்ள குளிர் காரணமாக உயிரிழந்து வருவதும் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த ஆண்டு கூட இதே போன்று கனடாவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற இந்திய குடும்பம் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது மீண்டும் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இந்திய குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா-அமெரிக்கா நாடுகளின் சர்வதேச எல்லையோரம் பாயும் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் சில சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கனடா காவல்துறையினர் அந்த சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மொத்தம் 8 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதில் நான்கு பேர் பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) இந்தியாவின் குஜராத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. கனடாவுக்கு சுற்றுலா சென்ற அவர்கள் அங்கு ஆற்றின் வழியாக சட்டவிரோதமாக குடியேற முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும் மீதம் இருக்கும் 4 பேர் ரோமானிய நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த ஆற்றைக் கடந்து அமெரிக்காவிற்கோ அல்லது கனடாவிற்கோ சட்டவிரோதமாகக் குடியேறும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அங்கு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.