பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவி விலகினார். எனவே தற்போது பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷெபாஸ் ஷெரீப். இவரது ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக கூறி, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அவ்வப்போது போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இப்படியாக இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மேலும் அவரை எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் அவரது கட்சி சமீபத்தில் அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் சிலர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பரபரத்து போன அந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தலைதெறிக்க ஓட, சிலர் காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானை மீட்டு லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், துப்பாக்க்கியால் சுட்ட மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதால் அவரை சுட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்ததுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு வீல் சேரில் அமர்ந்தவாறே இந்த சம்பவம் குறித்து இம்ரான் கான் ஆவேசமாக பேசினார். அப்போது பேசிய அவர், "அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன். இரண்டு பேர் என்னை சுட்டனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுட்டிருந்தால், நான் பிழைத்திருக்க மாட்டேன். மொத்தம் நான்கு தோட்டாக்கள் என்னை தாக்கியது.
தாக்குதலுக்கு முந்தைய நாள், வஜிராபாத்திலோ அல்லது குஜராத்திலோ என்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிந்துகொண்டேன். முதலில் நான் மதத்தை அவமதித்தேன் என்று என்னை குறிவைத்து வதந்தி கிளப்பப்பட்டது. இப்போது, ஒரு மத தீவிரவாதி என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளான். இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான்கு பேர் என்னைக் கொல்ல சதி செய்தார்கள். அவர்கள் யார் என்பது தொடர்பாக என்னிடம் ஒரு வீடியோ உள்ளது. எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது வெளியிடப்படும்" என்றார்.
முன்னதாக இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான ஆசாத் உமர் மற்றும் மியான் அஸ்லாம் இக்பால் இது குறித்து கூறியதாவது, "சிறிது நேரத்திற்கு முன்பு இம்ரான் கான் சம்பவம் தொடர்பாக அவர் சார்பில் அறிக்கை வெளியிடும்படி கூறினார். அதன்படி இந்த துப்பாக்கி சூடு சம்பவம் 3 பேரால் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் நம்புகிறார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் உள்ளிட்டோர் பின்னணியில் இருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்'' என்றனர்.