ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்களே வேறு நாட்டிற்குத் தப்பிச்செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.
இதையடுத்து பெண்கள், பாடகர்கள், நடிகர்களுக்குத் தாலிபான்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே நகைச்சுவை நடிகர் நாசர் முகமதுவை கடந்த மாதம் தாலிபான்கள் கொலை செய்தனர்.
இந்நிலையில், நாட்டுப்புற பாடகர் ஒருவரைத் தாலிபான்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிஷ்னாபாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர் ஃபவாத் அந்தராபி.
இவர் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர். இவரை நேற்று தாலிபான்கள் அவரது வீட்டிற்குச் சென்று, அவரை வெளியே இழுத்துப்போட்டு தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதை அவரது மகன் உறுதி செய்துள்ளார்.
மேலும், இவரது மகன் இது குறித்து உள்ளூர் தாலிபான் தலைவர்களிடம் இது குறித்து முறையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் 1996 - 2001ம் ஆண்டு ஆட்சியிலிருந்த தாலிபான்கள் அப்போதே பொது இசைக்குத் தடை செய்திருந்தனர். தற்போது மீண்டும் இதை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், இசைக்குத் தடை செய்யப்படுகிறது” என்றார். இந்நிலையல் நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி பாடும் வீடியோ ஒன்றைப் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தாலிபான்களுக்கு கண்டனங்கனை எழுப்பி வருகிறார்கள்.