உலகம்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அமெரிக்காவின் முதல் வெற்றி - ஜூலை 27 முதல் மூன்றாம் கட்ட பரிசோதனை!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அமெரிக்காவின் முதல் வெற்றி - ஜூலை 27 முதல் மூன்றாம் கட்ட பரிசோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1 கோடியே 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்றப் பாதையில் சென்று வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி முதல்கட்ட பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதாக ரஷ்யா சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில் அமெரிக்காவின் எம்.ஆர்.என்.ஏ-1237 கொரோனா தடுப்பு மருந்து, சோர்வு, குளிர், தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு வேலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா கண்டறிந்துள்ள இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்ட அமெரிக்காவின் முதல் தடுப்பு மருந்து என்ற பெயரை பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அமெரிக்காவின் முதல் வெற்றி - ஜூலை 27 முதல் மூன்றாம் கட்ட பரிசோதனை!

எம்.ஆர்.என்.ஏ-1237 தடுப்பு மருந்தை, வரும் ஜூலை 27ம் தேதி முதல் மூன்றாவது கட்டமாக மிகப்பெரிய சோதனையை துவங்க இருப்பதாக மாடர்னா அறிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது கட்ட சோதனையை துவங்கும் முதல் நிறுவனமாக மாடர்னா இருக்கும். பின்னர் தடுப்பூசி குறித்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்களின் கருத்தின் அடிப்படையில் இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மாடர்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கால ஆய்வுகள் அனைத்தும் சரியாக செல்லும்பட்சத்தில், ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் டோஸ்களும், 2021ல் துவங்கி ஆண்டுக்கு 1 பில்லியன் டோஸ் வரை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories