கேரளா மாநிலத்தில் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் தன்கச்சன் கடந்த ஜூலையில தனது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவரது வாகனத்தால் குறைவான பெட்ரோல் இருந்ததால் டிராபிக் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கேரள மோட்டர் வாகன சட்டத்தில் இதற்கு சட்டப்பிரிவு எதும் இருக்கிறதா என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனக்கு தெரிந்தவரை, இதுபோன்ற பில்கள், ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிலைத்து நிற்காது என்றும் தெரிவித்தார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் மீண்டும் நடைபெற்றுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலஞ்சேரியில் செப்டம்பர் 6-ம் தேதி ஏதர் 450-X என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
பின்னர் அவரிடம் போக்குவரத்து ஆவணங்களை கேட்ட அவர்கள், அதை வாங்கி பரிசோதித்துள்ளனர். லைசென்ஸ் உட்பட அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருந்த அவரிடம் மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் எங்கே என்று கேட்டுள்ளனர்.
மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் இல்லை எனக் கூறி ரூ.250 அபராதம் விதித்திருக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி வாகன ஓட்டுநரும் அபராதத்தை கட்டி ரசீது வாங்கி சென்றுள்ளார்.
பின்னர், அதனை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில், இதுவும் வைரலாகியுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாசுக்கட்டுப்பாடு சான்றிதழா என இணைவாசிகள் கேரள காவல்துறையினரை கிண்டல் செய்து வருகின்றனர்.