ட்விட்டரில் நேற்றிலிருந்து ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. தனி நபர்கள் முதல் உலக அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது ட்விட்டரில் ஒற்றை வார்த்தையில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் 'திராவிடம்' என பதிவிட்டுள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் 'ஜனநாயகம்' என பதிவிட்டுள்ளார். இப்படி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் என பலரும் தங்களுக்கு பிடித்தமான மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
இந்த வகையில் தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டரில் 'தமிழன்' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அண்ணாமலைக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர் கர்நாடகாவில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபோது பேசிய வீடியோவை வைரலாக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவில், "நான் எப்போதும் பெருமைமிக்க கன்னடன். தமிழ்நாட்டில் இருந்து நான் கர்நாடகா வந்தபோது அங்கு 300 பேருக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் கர்நாடகா வந்த பிறகு எனது திறமையை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்று பார்க்கவில்லை.
காவிரி பிரச்சனை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை. தமிழனாக என்னை நீங்கள் பார்க்கவில்லை. அண்ணாமலை என்ற போலிஸ் அதிகாரியாகத்தான் பார்த்தீர்கள்" என பேசியுள்ளார். இந்த வீடியோவை வைரலாக்கி பலரும் அண்ணாமலைக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.