
“தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
“தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. அவர்களின் கணினி பயன்பாட்டுத் திறனையும், படைப்பாக்கத் திறனையும் மேம்படுத்துகிறது.

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவியாக உள்ளது.
இத்திட்டத்தின் அடிப்படையில் தற்பொழுது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
இந்த மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. இது அவரின் மாணவர் விரோத மனநிலையையே காட்டுகிறது.”






