டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டத்திற்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டத்தை ஒன்றிய அரசு கட்டிவருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமான வேலைகள் துவங்கியதிலிருந்தே ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேற்பரப்பில் இந்தியாவின் தேசிய சின்னமான நான்குமுகச் சிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 11ம் தேதி திறந்துவைத்தார்.
இதையடுத்து நமது தேசிய சின்னத்தை மோடி அரசு அவமதித்து விட்டதாகவும், அரசியல் சாசன விதியை பிரதமர் மோடி மீறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, நமது தேசிய சின்னம் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ஆனால் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னத்தில் தேவையில்லாமல் சிங்கங்கள் ஆக்ரோஷத்துடன் இருப்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது. இது மக்களை அச்சுறுத்துவதுபோல் உள்ளது என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், புதிதாக வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தைக் குறிப்பிட்டு நாம் எங்கே செல்கிறோம் என விமர்சித்துள்ளார். இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், நாம் எங்கே செல்கிறோம் என குறிப்பிட்டு ராமர், அனுமன், அசோக சின்னத்தைக் குறிப்பிடும் படம் ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
அந்த படத்தில் ராமர், அனுமன், அசோக சின்னம் இதற்கு முன்பு அமைதியாக இருந்தது என்றும் ஆனால் தற்போது இந்த மூன்றும் ஆக்ரோஷத்துடன் இருப்பதுபோன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த ட்விட்டர் பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறது.