தனது உரிமையாளரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் நான்காவது மாடியில் இருந்து நாய் ஒன்று குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு, தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து சிகிச்சையளித்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அனிதா ராஜ் சிங், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனையடுத்து, அனிதா ராஜ் சிங்கின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அனிதாவின் மரணம் அவரது குடும்பத்தை துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் ஜெயா குரைத்துக்கொண்டே அழுதுள்ளது.
பின்னர், குடியிருப்பின் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளது. படுகாயமடைந்த நாயை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நாய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர்.
தன்னை பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.