கேரள மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு அம்மாநிலத்தில் கடந்த வாரம் பெண்களை முன்னிறுத்தி வித்தியாசமான முறையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த பேரணி இந்தியன் ஆயில், கொச்சின் ஷிப்யார்டு, யாசோரம் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான அதிகாரம், பாதுகாப்பு போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காகவும், அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவும் "மங்கை மாமாங்கம்" என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் சேலை உடுத்தி, ராயல் என்ஃபீல்ட் புல்லட் வண்டியை இயக்கி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணி கொச்சியின் வைட்டிலா பகுதியில் இருந்து ரவிபுரம் வரையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.
கனரக பைக்கான புல்லட் வண்டியை பெண்கள் சேலை உடுத்திக்கொண்டு இயக்கியது அம்மாநிலத்தில் பெரிதும் பேசப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. இதனை பலரும் பகிர்வது மட்டுமல்லாமல், சிங்கப்பெண்ணே என அவர்களை வாழ்த்தியும் வருகிறார்கள்.