நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6-வது கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
தலைநகர் டெல்லியில் மே 12-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி என்பவர் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் வெயிலில் பிரசாரம் செய்யமுடியாமல், கம்பீர் போல உருவ ஒற்றுமை கொண்ட நபரை வைத்து பிரசாரம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படம் ஒன்றை ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் கவுதம் காம்பீர், வாகனத்திற்குள் அமர்ந்திருக்கிறார். ஆனால், கறுப்பு நிறத் தொப்பி அணிந்துகொண்டு கம்பீர் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மக்களை நோக்கி கைகளை அசைத்து வாக்கு கேட்கிறார்.
இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்து, வெயிலில் நின்று பிரசாரம் செய்ய முடியாதவர் எப்படி மக்களுக்காக உழைக்கப் போகிறார் என விமர்சித்துள்ளனர்.