இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் நான்காவது கட்டமாக 17 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நடந்தபோது மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பரில் உள்ள நவ்நாத் நகரில் வசிக்கும் ஏக்நாத் மோதிராம் சவுத்ரி, பா.ஜ.க விற்காக வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். தனது நாயின் உடம்பு முழுவதும் மோடிக்கு வாக்களியுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் இடம் பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தார்.
அந்த நாயுடன் ஏக்நாத், நந்துர்பர் நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரம் முடிந்திருந்த நிலையில் நாய் மூலம் பிரசாரம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பா.ஜ.க விற்காக பிரசாரம் செய்த நாயையும், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாய் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.