
சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில வள மையத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,”பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு விளையாட்டுத்தனமாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மாநில வள மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் வாழ்க்கைப்பாடத்தின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், AI உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இங்கு ஆசிரியர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்து ஆய்வு செய்வதாக இருந்தாலும் அல்லது அறிவியல் சார்ந்து கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், பிற ஆசிரியர்களுக்கும் சொல்லித் தரும் வகையில் காணொலிக் காட்சி (Video Conference) அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திராவிட மாடல் அரசை ஒன்றிய பா.ஜ.க அரசே பாராட்டி வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 1-5 வகுப்பு வரை பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்






