
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில், 23வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஊக்கமளித்தல் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால்,தமிழ்நாடு வீரர்கள் மாநில,தேசிய மற்றும் உலகளாவிலான விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்களை குவித்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் ”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்ற நடவடிக்கை நடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றுவதுதான் எங்களுடைய இலக்கு. எல்லா வகையான போட்டிகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஊக்குவிக்கிறது வருகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டிற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறது. வீரர்களின் திறமையை கண்டறிந்து தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. அரசின் ஊக்குவிப்பால் தமிழ்நாடு வீரர்கள் மாநில,தேசிய மற்றும் உலகளாவிய விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்,
ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஒன்பதாம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 88 பிரிவுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.






