
அரசுப் பள்ளிகளை முன்னேற்ற பொதுமக்கள், சிறு பெரு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை இணைத்து ’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னையில் தொடங்கிய இந்த திட்டம் கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் பகுதிகளை தொடர்ந்து இன்று சேலத்தில் ’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ. 47 ஆயிரத்து 867 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் உயர்கல்விக்காக ரூ. கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடியை கல்விக்கு மட்டுமே நமது முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு இந்தியா முழுவதற்கும் சேர்த்தே ரூ.72 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.
மாணவர்களின் கல்விக்காக கழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் அரசு பள்ளிகளை இன்றும் மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி நிதி கிடைத்துள்ளது. அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி உள்ளது அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் என்கிற அளவிற்கு மாற்றியதற்கு அரசு மட்டுமல்ல உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.








