கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கியது. அதோடு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் கட்சியினர் பலரும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய நிலையில், அதற்கும் வீடியோ ஆதாரத்துடன் இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல், நேரத்தை இழுத்தடித்ததும், அவரது முகத்தை காட்டாமல் ரோட் ஷோ மேற்கொண்டதும் இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் சம்பவம் நடந்த அன்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் பனையூருக்கு பறந்த விஜய், 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவிலும் இந்த நிகழுவத்தில் அரசியல் செய்யும் வகையில் பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக பேசாமல், கடந்து செல்ல முயன்ற விஜய், இறுதியில் தமிழ்நாடு அரசு மீது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியுள்ளார்.
இப்படியான நிலையில் இந்த சம்பவம் குறித்த வழக்கு நேற்று (அக்.03) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், விஜய்க்கும், விஜய் கட்சியினருக்கும் நீதிபதி செந்தில் குமார் தனது வலுமையான கண்டனத்தை தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவதூறு பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பதோடு, பாஜகவை சேர்ந்த ஒருவரும், தவெக-வை சேர்ந்த 2 பேரும், Youtuber ஃபெலிக்ஸ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
அதோடு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் இந்த விவகாரம் குறித்து Youtuber மாரிதாஸ் அவதூறு பரப்பிய நிலையில், இன்று (அக்.04) அவர் சென்னை நீலாங்கரை தென் மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.