தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 0 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான மருத்துவ உதவிகள் அளித்தனர். அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நள்ளிரவே கரூருக்கு விரைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் போர்க்கால நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைத்தும் உத்தரவிட்டார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இந்திய அளவில் உலக அளவிலும் செய்தியாக மாறியதோடு சீனாவும் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்த கோர சம்பவத்துக்கு விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசு குறித்து அவதூறு பரப்பி திசைத்திருப்ப முயன்று வருகிறது. மேலும் விஜய், கரூரில் பேசுவதற்கு சுமார் 12 மணியளவில் நேரம் கேட்டிருந்த நிலையில், மாலை 7 மணியளவிலேயே கடும் கூட்டம் சேர்ந்த பிறகே பேசினார்.
அதோடு கூட்டம் அதிகளவில் இருப்பதாகவும், எனவே உள்ளே நுழையுமுன்பே இங்கே பேசுமாறும் போலீசார் அறிவுறுத்தியும், அதனை விஜய் மற்றும் நிர்வாகிகள் கேட்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக இணை செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் என்பவரையும் கரூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த சம்பவத்தில் அவதூறு பரப்பிய 25 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, பாஜகவை சேர்ந்த சகாயம், தவெகவை சேர்ந்த பிரமுகர் சிவநேசன் மற்றும் சரத்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவதூறு பரப்பிய Youtuber Felix என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சூழலில் கரூர் சம்பவத்தை விசாரிக்க பாஜக, உண்மை கண்டறியும் குழுவை ஒன்றை அமைத்துள்ளது. பாஜகவின் இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு : -
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.
கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும். இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, ராகுல் காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.