பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் (80) அண்மையில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று நிலையில், இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
நாகாலாந்து ஆளுநரும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கொள்கைகளைப் பரப்பிய முக்கிய கொள்கையாளருமான நண்பர் இல.கணேசன் அவர்கள் (வயது 80) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
கொள்கையில் நேர் எதிரானவர்களான நாங்கள் இருவரும், நட்பில் நல்ல நண்பர்கள் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட நன்கு அறிவர். கொள்கை வேறு; பண்பாடு - நட்பு வேறு. மேடையில் பேசினாலும் நனி நாகரிகத்துடன் பேசி எவரிடத்திலும் அப்படியே நடந்து கொள்ளும் நல்ல மனிதர்.
அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்கக் கொள்கையாளர்களுக்கும் மட்டும் இழப்பல்ல. பண்பான அரசியல் பொதுவாழ்வுக்கும் ஒரு பெரும் இழப்பு! அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.