VinFast கார் தொழிற்சாலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் VinFast கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் உற்பத்தியாகும் கார்களை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வியட்நாம் நிறுவனமான VinFast திட்டமிட்டுள்ளது
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான VinFast நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, தூத்துக்குடி சிலாநத்தம் பகுதியில் 408 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவு பெற்றுள்ளது.
முதல் கட்டமாக ரூ.1120 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையிலான 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனைக் களம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் நேரடியாக செல்கிறாரா அல்லது காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாரா என்பது குறித்து முதலமைச்சர் வீடு திரும்பியவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.