இதழியலைத் தொழிலாக தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பினை (Post Graduate Diploma Course) வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் நிறுவனத்தை” தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலைத் தொழிலாக தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பினை (Post Graduate Diploma Course) வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் நிறுவனத்தை” தொடங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, சென்னை இதழியல் கல்வி நிறுவனம் 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் சென்னையில் தொடங்கப்படும். இதற்காக, ரூ.775 இலட்சம் ஒப்பளிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை இதழியல் நிறுவனமானது, நிறுவனங்கள் சட்டம், 2013 பிரிவு 8 (1) இன் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை இதழியல் நிறுவனத்தில் (Chennai Institute of Journalism) இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பினை (Post Graduate Diploma of Journalism) இக்கல்வியாண்டு முதல் (2025 - 2026) தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை இதழியல் நிறுவனத்தின் நிருவாகக் குழுத் தலைவராக, “தி இந்து” குழுமத்தின் இயக்குநர் (ம) “தி இந்து”நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு. என். ரவி அவர்களும் தலைமை இயக்குநராக “தி இந்து” நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திரு.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.