2025 ஆண்டிற்கான, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற உள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் தொடர்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது, "உலக விளையாட்டு வரைப்படத்தில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய இடத்துக்கு கொண்டு வரும் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. திறமையான விளையாட்டு வீரர்களை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக, தமிழ்நாடு திகழ்கிறது. சர்வதேச அளவிலான செஸ் தொடர், ஸ்குவாஷ், அலைச்சறுக்கு, ஆசிய ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தி சாதனை படைத்துள்ளது.
இதற்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக formula 4 கார் பந்தயம் நடைபெற்றது.இதுபோன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம், விளையாட்டுக்கு தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை காணலாம். ஆசிய அலைச்சறுக்கு போட்டிகளை நடத்துவதற்காக, தமிழ்நாடு அரசு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது உலக அலைச் சறுக்கு போட்டிகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த அலைச்சறுக்கு போட்டிகளில் 20 நாடுகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் அலைச்சறுக்கு விளையாட்டை ஊக்குவிக்க சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டில் நீர் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க முடியும்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருப்பன் வலசை கிராமத்தில், சர்வதேச அளவிலான ஒலிம்பிக் நீர் விளையாட்டு ஆணையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 43 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.