வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து சென்னை, கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கொளத்தூர் பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் பொது நூலகத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் 'முதல்வர் படைப்பகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :-
ஜவஹர் நகர் நூலகத்தை புதுப்பித்து புதிதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். முதல்வர் படைப்பகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 9 இடங்களில் இதுபோன்ற முதல்வர் படைப்பகங்களை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
இராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க. நகர், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் 9 முதல்வர் படைப்பகம் அமைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதற்கான பணியை தொடங்கி வைப்போம். இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்த முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தென் சென்னையிலும் 6 இடங்களில் முதல்வர் படைப்பகம் கொண்டு வர திட்டமிடப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். முதல்வர் படைப்பகத்தில் பயின்று வந்த 6 பேர் TNPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். முதல்வர் படைப்பகம் மூலம் சென்னை கல்வியில் சிறந்த நிலையை அடையும். கல்வியும் பொருளாதாரமும் உயர்ந்தாலே வன்முறை ஏற்றத்தாழ்வு இருக்காது." என்றார்.
=> இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு...
"பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?. பாஜக இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்தும் மாநாட்டை நடத்துகிறார்கள். ஆனால் திராவிட மாடல் அரசு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.117 முருகன் திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழனியில் ரம்யமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒரு கடவுள் முருகனுக்கு சிறப்பு செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
ஏற்கனவே பாஜக-வினர் வேலை கையில் எடுத்துக்கொண்டு சுற்றினார்கள். அதில் கிடைத்தது பூஜ்யம்தான். முதலமைச்சர் பக்கத்தில்தான் முருகன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்திற்கு சென்ற பொழுது மாநாட்டுக்கான நோட்டீஸ் கொடுத்தார்கள். முருகன் படம் அதில் இருந்ததால் நான் கையில் பெற்றுக் கொண்டேன்." என்றார்.
=> தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஏடிஎம் குடிநீர் வடசென்னை பகுதியில் சரியாக செயல்படவில்லை என்ற கேள்விக்கு...
"ஒரு புதிய திட்டம் தொடங்கும் பொழுது சிறு சிறு குறைகள் இருக்கும். அது சரி செய்யப்படும். தற்பொழுது அந்த 4 குடிநீர் ஏடிஎம்களும் செயல்படுகிறது." என்றார்.
=> அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு...
"அம்மா குடிநீரை அவர்கள் எந்த இடத்தில் தொடங்கி அதை நாங்கள் எடுத்து விட்டோம் என்று அவர்கள் சுட்டிக் காட்டினால் நாங்கள் பதில் சொல்கிறோம். இந்தக் கூட்டணி உறுதிமிக்க கப்பல். இந்த கப்பலின் மாலுமியான முதலமைச்சர் புயல் பூகம்பங்களை எல்லாம் சம்பாதித்து கப்பலை செலுத்தி வருகிறார். 2026லும் கடல் முரணாக இருந்தாலும் அரணாக மாற்றி இந்த ஆட்சியை தொடர்வோம்" என்றார்.