உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி 7 க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல் பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறினர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
மனுதாரர்கள், ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும்.இதனால், கிராமம் செழிப்பாக இருக்கும்" என கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.