தூத்துக்குடியில் அமைந்து வரும் வின் பாஸ்ட் மின் வாகன ஆலை பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதையடுத்து, அந்நிறுவனத்தின் வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
இந்த வின்பாஸ்ட் வாகன தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், வாகன பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. இங்கு V7,V6 ஆகிய இரண்டு வகை வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கிறது.
தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் வாகன தொழிற்சாலை ஜூலை மாதத்தில் மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வாகனங்களை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதால், வாகனங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.