சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்ற 2 இளைஞர்கள் மீது எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், மாம்பலம் ரயில்வே போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல்(20), சபீர் அகமது(20) என தெரியவந்தது. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் இன்ஜீனியரிங் 4ம் ஆண்டு படித்து வந்தனர்.
ஆதம்பாக்கத்தில் விடுதியில் தங்கி இருந்தனர். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கிரிக்கெட் விளையாட தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரெயில் மோதி பலியானது தெரியவந்தது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.