தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் உலக நாடுகளுக்கு சென்று, அந்நாடுகளின் வரலாற்று சிறப்புகளையும், அறிவியல் வளர்ச்சியையும் கற்க, காண தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடர்ச்சியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 7 முறை வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா கொண்டு செல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 52 அரசுப் பள்ளி மாணவர்களுடன் 8ஆவது முறையாக வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா செல்ல வழி வகுத்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து மலேசிய நாட்டினுள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்கள், தமிழ் அடையாளங்களை தாங்கி நிற்கும் சின்னங்களைப் பார்வையிட வேண்டும் எனும் நோக்கில் பயணத் திட்டத்தை வகுத்துள்ளோம்.
அவ்வகையில் இன்று மெர்டேக்கா சதுக்கம் என அழைக்கப்படக்கூடிய சுதந்திர சதுக்கத்தை மாணவச் செல்வங்களுடன் பார்வையிட்டோம்.
'அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து முதன்முதலாக அந்நியர்களின் கொடி இறக்கப்பட்டு மலேசியக் கொடி ஏற்றப்பட்டது இந்த இடத்தில்தான்' என்பன போன்ற தகவல்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டு உரையாடினோம்” என பதிவிட்டுள்ளார்.