திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஷ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல” என்று வாதிட்டார்.
மேலும் வாதிட்ட அவர், "இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு, கோழி பலியிடுவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது.
காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது.
மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம் என்றும் யாருடைய மத வழிபாட்டிலும் அரசு தலையிடாது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்னைகளை உருவாக்கும்" என தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யாத்திரை நடத்த கேட்டுள்ள வழித்தடம் நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். பிறகு மனு மீதான உத்தரவை நாளை மறுதினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.