தமிழ்நாடு

”பா.ஜ.கவின் எடுபுடியாக இருக்கும் ED” : விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.கவின் எடுபுடியாக ED செயல்பட்டு வருகிறது என கே.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

”பா.ஜ.கவின் எடுபுடியாக இருக்கும் ED” : விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் அப்பம்ம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு அப்பகுதியில் சுமார் ஆறரை ஏக்கரில் விளைநிலம் அமைந்துள்ளது. இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பா.ஜ.கவின் சேலம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. விவசாயிகள் இருவரின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் இருவரும் வழக்கறிஞர் பிரவீனா என்பவரின் உதவியுடன், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். படிக்கத்தெரியாத, வயதான விவசாயிகளுக்கு உதவியாகச்சென்ற வழக்கறிஞர் பிரவீனாவை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், அப்பாவி விவசாயிகள் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளனர். உணவிற்கே வழியில்லாத தங்களுக்குச் சொத்து அதிக அளவில் இருப்பதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது வேடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

”பா.ஜ.கவின் எடுபுடியாக இருக்கும் ED” : விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி வரும் பா.ஜ.க, தற்போது தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகச் செயல்படும் ஏழை எளிய மக்களையும் மிரட்டத் தொடங்கிவிட்டதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்ளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை தற்போது, பா.ஜ.கவின் அடியாட்களாகவே மாறிவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க அரசின் எடுபுடியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "அமலாக்கத்துறை ஒன்றிய பா.ஜ.க அரசின் எடுபுடியாக உள்ளது என்பதைச் சேலம் விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பியது மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உட்பட்டது.

முதியோர் ஓய்வூதியத்தில் தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் அப்பாவி விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் பா.ஜ.க சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரனுக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், பா.ஜ.க நிர்வாகி குணசேகரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சேலத்தில் சி.பி.எம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories