தமிழ்நாடு

முக்கொம்பு விவகாரம் : “பாரபட்சமின்றி நடவடிக்கை - எடப்பாடி சொல்வது உண்மையல்ல” - முதலமைச்சர் பேச்சு!

“எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முக்கொம்பு விவகாரம் : “பாரபட்சமின்றி நடவடிக்கை - எடப்பாடி சொல்வது உண்மையல்ல” - முதலமைச்சர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு 3-வது நாள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,   திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்புக்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4-00 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள். 

முக்கொம்பு விவகாரம் : “பாரபட்சமின்றி நடவடிக்கை - எடப்பாடி சொல்வது உண்மையல்ல” - முதலமைச்சர் பேச்சு!

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததின் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.   

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.  அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கொம்பு விவகாரம் : “பாரபட்சமின்றி நடவடிக்கை - எடப்பாடி சொல்வது உண்மையல்ல” - முதலமைச்சர் பேச்சு!

மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories