இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023”யை சுற்றுலாத்துறை தயார்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023”-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவன உதவியுடன் ஐந்து ஆண்டுகளில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடி செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல் சென்னை புறநகரில் அமைகிறது புதிய தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த தீம் பார்க்கில் அட்வென்சர் ரைடிங், குழந்தைகளுக்கு விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, விளையாட்டு அரங்குகள் இடம் பெற உள்ளது.