தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் இந்த ஆன்டிற்கான 'தகைசால் தமிழர் விருது' திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கி.வீரமணி நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் இன்ப அதிர்ச்சி செய்தியாக தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்திற்கு அளிக்கப்பட்ட விருது, தந்தை பெரியாரின் தொண்டர்களை பெருமைப்படுத்தும் மூலமாக பெரியாரை பேணுகின்ற பெரியாரின் துணை கொண்ட ஆட்சி என்பதை காட்டும் விதமாக இந்த வாய்ப்பு எனக்கு அளிக்கபட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சிக்கு, திராவிட உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விருது பெறுகிற நேரத்தில் அறிவிக்கிறேன்" என்றார்.
"தகைசால் தமிழர்" விருது அறிவிக்கப்பட்டபோது முதல் முறையாக சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டது. பின்னர் நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.