தமிழ்நாடு

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

சர்வாதிகாரப் போக்கில், மணிப்பூரில் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க இளைஞர் அணியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா என்கிற ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் : 1

முத்தமிழறிஞரின் புகழ் பரப்பும் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!

அண்ணா நூற்றாண்டு நூலகம் - வள்ளுவர் கோட்டம் - டைடல் பார்க் – மேம்பாலங்கள் - பல்கலைக்கழகங்கள் - பல நூறு கல்வி நிலையங்கள் என நவீன தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும், தான் உருவாக்கிய கட்டமைப்புகளால் மறையாமல் நிலைத்திருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய சிறப்புமிக்க கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், அவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திட, பொதுமக்கள் பயனடையும் வகையில், ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்திருக்கிறது கழக அரசு.

ரூ.230 கோடியில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சென்னையில் ‘கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை’யையும், தென்தமிழ்நாட்டின் அறிவியக்கமாக ரூ. 215 கோடி மதிப்பில், மதுரையில் `கலைஞர் நூற்றாண்டு நூலக’த்தையும், தமிழ்நாட்டின் கலை - இலக்கியம் - அரசியல் எனப் பல்வேறு துறைகளில் பங்காற்றிய முத்தமிழறிஞரின் வாழ்வையும் தொண்டையும் வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லிடும் வகையில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள `கலைஞர் கோட்ட’த்தையும் உருவாக்கிய, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட எளிய மக்களிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்திட, தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில், கழகக் கொள்கைகளைப் பரப்பியும், உடன்பிறப்புகள் பயனடையும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஆண்டு முழுவதும் கொண்டாடிட அணியின் நிர்வாகிகளை இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 2

திராவிட மாடலின் மணிமகுடம்!

கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டணமில்லா மகளிர் பேருந்துப் பயணத் திட்டத்தில் இன்று நாளொன்றுக்கு 49 லட்சம் பயணங்கள் என இதுவரை மொத்தம் 312 கோடி கட்டணமில்லா பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர் கல்விக் கனவை உறுதி செய்திட, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான `புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 21 ஆயிரத்து 289 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அழியா செல்வமான கல்வியை இடைநிற்றல் இன்றி அனைவருக்கும் கொண்டு சேர்த்து ஆரம்பக் கல்வியை உறுதி செய்திட, `முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம்’ உள்ளிட்ட பல சமூகநீதி திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.

திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமன்றி, அவை கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்திட, `கள ஆய்வில் முதலமைச்சர்’ எனும் முன்னெடுப்பின் வாயிலாக தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கியுள்ளார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

பழம் பெருமையும், பண்பாட்டுச் செழுமையும் கொண்ட தமிழர்களின் வரலாற்றை, உலகம் போற்றும் வகையில் கொண்டு சேர்த்திடவும், உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மைக்குப் பெருமை சேர்த்திடவும் காலத்திற்கேற்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கீழடி அருங்காட்சியத்தை அமைத்துள்ளது கழக அரசு.

இப்படி இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடியான திட்டங்களால் வளர்ச்சிமிகு பாதையில், தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்களுக்கு இளைஞர் அணியின் மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தீர்மானம் : 3

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

`சொன்னதைச் செய்யும்’ முத்தமிழறிஞரின் வழியில், தேர்தல் கதாநாயகனாம் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று, தமிழ்நாடெங்கும் மகளிர் எதிர்பார்த்த மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் புரட்சிகரத் திட்டத்திற்கு, செயல்வடிவம் தந்துள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள். மகளிருக்கான சொத்துரிமையைப் பெரியார்- அண்ணல் அம்பேத்கரின் வழி நின்று உறுதி செய்த முத்தமிழறிஞரின் பெயரில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” எனப் பெயரிட்டு, அத்தகைய பெருமைமிகு திட்டத்தைப் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் வழங்க உள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது.

மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் வாயிலாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’த்தின் வெற்றிக்காக உழைத்து, தகுதி வாய்ந்த அனைத்து மகளிரையும் இந்த உரிமைத் தொகை சென்றடையும் வகையில், செயல்பட்டு வரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம் : 4

புதிய நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கழகத்தின் எதிர்காலத்திற்காகவும் நம் கழகத் தலைவர் அவர்களால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டதுதான் கழகத்தின் எழுச்சிமிகு இளைஞர் அணி. 43 ஆண்டுகள் கடந்து இயக்கத்துக்கு

புது இரத்தம் பாய்ச்சி அவர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்காலாய் விளங்கும் இளைஞர் அணியின் பணிகளை மாவட்ட - மாநில - மாநகர அளவில் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க முழு ஒத்துழைப்பை வழங்கிய கழகத் தலைவர் அவர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இதேபோல, ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளை - வார்டு கழகங்களில் நேர்காணல் நடத்தி இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை விரைந்து நியமித்திட வேண்டுமென இந்தக் கூட்டம் மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் கழக செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறது. இப்பணிகளில் அவர்களுடன் இணைந்து தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இந்தக் கூட்டம் அறிவுறுத்துகிறது.

தீர்மானம் : 5

இல்லந்தோறும் இளைஞர் அணி

திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையில் இளைஞர்களை வளர்த்தெடுக்கும் பாசறையாகச் செயலாற்றி வருகிறது கழக இளைஞர் அணி. அத்தகைய செயலாற்றல்மிகு அணியில் சேர, ஆர்வமுள்ள 16 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை, இல்லந்தோறும் சென்று அணியில் உறுப்பினராக இணைத்திடும், `இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பை முதன்மையானதாக ஏற்றுச் செய்திட வேண்டும் என மாவட்ட-மாநில-மாநகர- அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை இந்தக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இந்த `இல்லந்தோறும் இளைஞர் அணி’ முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் புதிய இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்ப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 6

கலைஞர்- 100 – திராவிட மாடல் பயிற்சிப் பாசறை

திராவிட இயக்கக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த சிற்பியாக, பல நூறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டைச் சமூகநீதி அரசியலின் முன்னோடி மாநிலமாக உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தமிழினத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில், தன் வாழ்நாள் முழுவதும், ஆதிக்கவாதிகளுக்கு எதிராக நின்று தமிழ் பெரும் நிலத்தின் சுயமரியாதையைக் காத்து நின்றவர்.

தான் கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் விலகாத முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், அவர் உயர்த்திப் பிடித்த இயக்கக் கொள்கைகளை, சமூக நீதித் திட்டங்களை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் “கலைஞர் 100 - திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அளவில் தொடர்ந்து நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

234 தொகுதிகளிலும் இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை நடத்தி முடிக்க காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர்கள், கருத்துரையாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

மேலும், அடுத்தத் தலைமுறை இளைஞர்களை அரசியல்மயப்படுத்தி, புதியவர்களை, கழகத்தை நோக்கி ஈர்க்கவும், கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கழகத் தலைவரின் கரங்களை வலுப்படுத்தவும், இளம் பேச்சாளர்களை அடையாளம் காண மாவட்டந்தோறும் `திராவிட மாடல்’ பயிற்சி வகுப்புகளை நடத்திட வேண்டுமென இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தீர்மானம் : 7

மக்கள் பணிகளைத் தொடர்வோம்

கழகம் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகப் பணிகளை என்றும் விடாது தொடர்கிறது கழக இளைஞர் அணி. அதன் தொடர்ச்சியாக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் மரக்கன்றுகள் - பனைவிதைகள் நடுதல், சுற்றுச்சூழல் காக்கத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், இரத்ததான முகாம்கள், தேவையுள்ளோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் வழங்குதல் என மக்கள் பயனடையும் வகையிலும், கழகத்திற்குப் பெருமை சேர்த்திடும் வகையிலும். மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 8

ஒன்றியப் பணியிடங்களில் தமிழர்க்கு முன்னுரிமை!

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிப் பணிகளில், எழுத்தர் (Clerk) பணிக்கு மாநில மொழி அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை ஒன்றிய அரசின் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) கடந்த சில ஆண்டுகளாக விளம்பரப்படுத்தி வருகிறது. தற்போது 2022 - 2023-ஆம் ஆண்டுக்கான எழுத்தர் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் எழுத்தர் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் இந்த நடைமுறையால் 400-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் இவ்வாறு வங்கிப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

கிராமம் மற்றும் சிறு நகர வங்கிகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவரின் பணி நியமனங்கள், ஏழை-எளிய மக்கள் தங்களுக்கான சேவையைப் பெறுவதில் மொழி ரீதியிலான பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகத்தின் இந்த நடைமுறையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டியும், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பணிகளை, தமிழருக்கே வழங்க வேண்டுமெனவும் ஒன்றிய அரசை இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

முகமூடி அரசியலுக்கு முடிவுரை!

நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும்

சட்ட விரோத பழிவாங்கும் போக்கைக் கையாண்டு அரசியல் இலாபம் அடையத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கோழைத்தனமான போக்கை இளைஞர் அணியின் மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களை முடக்கி வைப்பது, தமிழினத்தின் தலைமகன் அண்ணா, தமிழ் நிலப்பரப்புக்குத் `தமிழ்நாடு’ என வைத்த பெயரை மாற்ற முனைவது,

அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிப்பது என ஆளுநராகச் செயல்படாமல் அரசியல்வாதியாகச் செயல்படத் துடிக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த முகமூடி அரசியலுக்கு முடிவுரை எழுதாவிடில், சுயமரியாதைமிக்க தமிழ்நாட்டின் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் எனவும் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கிறது.

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தீர்மானம் : 10

மோடியின் முதலைக் கண்ணீருக்குக் கண்டனம்

காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 2002-ஆம் ஆண்டில், இரண்டு சமூக மக்களிடையே உருவாக்கப்பட்ட கலவரத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அன்றைய குஜராத் முதலமைச்சர் மோடி அவர்கள், தற்போது ஒன்றிய பிரதமராக, மணிப்பூரில் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையிலான கலவரத்தையும் கண்டுக்கொள்ளாமல் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்.

மணிப்பூரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போதும் அதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், 73 நாட்கள் வாய் மூடிக் கிடந்தார் பிரதமர் மோடி அவர்கள்.

பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் தான் இத்தகைய நிலை நீடிக்கிறது, `டபுள் எஞ்சின் கவர்ன்மென்ட்’ என்று மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க அரசின் வெறுப்புப் பிரச்சாரம்தான் மணிப்பூரைப் பற்றி எரியச் செய்திருக்கிறது. மே மாதம் முதல் அங்கு இணையச் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் இறந்தும், பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளான பின்னரும், வாய் திறக்காத பிரதமர் மோடி அவர்கள் இன்று போலித்தனமாக ஊடகங்களுக்கு முன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்காமல், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். சர்வாதிகாரப் போக்கில், மணிப்பூரில் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமருக்கும், அவர் தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் இளைஞர் அணியின் இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் : 11

`இந்தியா’வுக்கு வாழ்த்து!

வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூகப் பாதுகாப்பின்மை, கேள்விக்குறியாகும் மகளிர் சுதந்திரம், பறிபோகும் சிறுபான்மையினர் உரிமைகள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் என ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிற்போக்கு அலங்கோல அரசியலால் கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் ஜனநாயக மாண்புகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இந்த மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தைப் பின்பற்றி ஒன்றியத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த நம் கழகத் தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி) “Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)” கூட்டணிக்கும், ஜனநாயகம் காக்கக் களமாடி வரும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இளைஞர் அணியின் இந்த மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து, கூட்டணியின் வெற்றிக்கு உழைக்க உறுதியேற்கிறது.

தீர்மானம் : 12

தலைவர் தலைமையில் தயாராவோம்!

ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் வகுப்புவாத சாதியப் பிற்போக்கு அரசியலால், இந்திய ஒன்றியத்தை இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் விடியலை உறுதி செய்ய, 2024 மக்களவைத் தேர்தலில் பாசிச பா.ஜ.க. - அடிமை அ.தி.மு.க கூட்டணியை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில், இந்தியா முழுமைக்குமான நம்பிக்கை முகமாக உள்ளார் நம் கழகத் தலைவர் அவர்கள்.

அவரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக கழக இளைஞர் அணியின் செயலாளர் அவர்கள் தலைமையில், 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதி செய்யும் வகையில், நாம் பாடுபடுவோம் என இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

மணிப்பூரில் கலவரம்: முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி : தி.மு.க இளைஞர் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தீர்மானம் : 13

இளைஞர் அணி மாநாட்டு அனுமதிக்கு நன்றி

முத்தமிழறிஞரின் தலைமையில், நம்முடைய கழகத் தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் 1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உருவான இளைஞர் அணி, இன்று ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்கும் கொள்கைப் பாசறையாகவும், தமிழர்களுக்கான உரிமை காக்கும் போராட்டத்தில் களமாடும் போர்ப்படையாகவும், கழகத்தின் வெற்றிக்காக இளைஞர்களை, அரசியல்மயப்படுத்தி வளர்த்தெடுத்திடும் களமாகவும் உள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு திருவெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டைத் தலைமையேற்று, மிகுந்த எழுச்சியோடு சிறப்புற நடத்தினார் நம்முடைய கழகத் தலைவர் அவர்கள். அவருடைய வழியில் வீறுநடை போடும் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை கழகத் தலைவர் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.

இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது, தலைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில், 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்து மாநாட்டுப் பணிகளைச் சிறப்புற மேற்கொள்ள, இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

முன்னதாக, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ். ஜோயல் வரவேற்றுப் பேசினார்.

Related Stories

Related Stories