சமீபத்தில் அமலாக்கத்துறையினரால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக , தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், சிலர் முதல்வரின் இந்த வீடியோ பதிவுடன், நடிகர் வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகளை இணைத்து வெளியிட்டிருந்தனர். இதனை கண்ட ஈரோடு தெற்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப அணியினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சைபர் க்ரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துனர். அதில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கெளதம் என்பவர் சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து அதனை பரப்பியதை கண்டுபிடித்தனர்.
இதனால் கெளதமை கைது செய்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதை அறிந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அதிமுகவினர், கௌவுதமை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறாக பதிவு செய்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா என்பவரை மதுரை சைபர் கிராம் போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.